என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை - அமைச்சர் செங்கோட்டையன்
புதன், 17 ஆகஸ்ட் 2011 (12:45 IST)
தமிழ்நாட்டில் 'என்டோசல்பான்' பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கேரளாவில் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அங்குள்ள நீதிமன்றம் என்டோசல்பான் பூச்சி மருந்திற்கு தடை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றமும் இதனை தடை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் என்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து வைத்துக் கொள்ளவோ, விற்கவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.
இதைத் தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் இங்கு ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டி.கத்தரிக்காய் சோதனை செய்யப்படுகிறது என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பி.டி.கத்தரிக்காயை சோதிக்க கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.