வீகன் டயட் விபரீதம்! பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை!

Prasanth Karthick

ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (11:27 IST)
ரஷ்யாவில் வீகன் உணவுமுறையை பின்பற்றும் ஒருவர் தன் குழந்தைக்கு சரியாக உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வரும் உணவுமுறை பழக்கங்களில் ஒன்றாக வீகன் உணவுமுறை இருந்து வருகிறது. இது வெஜிடேரியன் உணவுமுறையை விட கட்டுப்பாடுகள் நிறைந்தது. வீகன் உணவு முறையில் இறைச்சி மட்டுமல்லாமல், விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களும் முற்றிலுமாய் தவிர்க்கப்படுகிறது. இதனால் பலருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

சமீபத்தில் பிரபலமான இன்ஸ்டாகிராம் பெண்மணி ஒருவர் தொடர்ந்து வீகன் முறையில் பழ ஜூஸ் மட்டுமே குடித்து வந்த நிலையில் ஊட்டச்சத்து குறைவால் பலியானார். தற்போது ரஷ்யாவிலும் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யாவில் சமூக வலைதள இன்புளூயன்சராக இருப்பவர் மாக்சிம் லியுட்டி. இவர் வீகன் டயட் முறை குறித்து வீடியோ பதிவுகள் இட்டு பிரபலமாக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயது நிரம்பாத பச்சிளம் குழந்தை உள்ளது. சமீபமாக லியுட்டி வீகன் ப்ராணா டயட் என்ற முறையை பேசி வந்துள்ளார். ஊட்டச்சத்துகளை உணவின் மூலமாக மட்டுமல்லாமல் சூரிய ஒளி உள்ளிட்ட இயற்கை வழியில் பெறுவது குறித்த டயட் முறை அது.

அதில் தனது குழந்தையையே ஈடுபடுத்திய லியுட்டி, தன் குழந்தைக்கு பால் உள்ளிட்ட எந்த ஆகாரமும் கொடுக்காமல் சூரிய ஒளியில் மட்டும் காட்டி வந்துள்ளார். இதனால் பசியில் வாடிய பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லியுட்டியை கைது செய்து 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்