மாஸ்கோ துப்பாக்கிச் சூடு நடந்த 14 மணி நேரத்தில் 4 குற்றவாளிகள் கைது - ரஷ்யா அறிவிப்பு

Sinoj

திங்கள், 25 மார்ச் 2024 (23:15 IST)
மாஸ்கோ துப்பாக்கிச் சூடு நடந்த 14 மணி நேரத்தில் 4 குற்றவாளிகள் கைது  என ரஷ்யா அறிவித்துள்ளது.
 
ரஷ்யாவை அதிர வைத்த மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக 4 பேர் மீது பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான அடையாளம் அவர்களின் முகத்திலும் உடலும் காணப்பட்டன.
 
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடமேற்கு புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸ்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. சுமார் 6000 பேர் கூடியிருந்த அரங்கிற்குள் திடீரென நுழைந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
 
இதில் குறைந்தது 137 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா எதிர்கொண்ட மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடைபெற்ற 14 மணி நேரத்துக்கு பின்பு, மாஸ்கோவிற்கு தென்மேற்கு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க்கில் வைத்து நால்வரும் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை தெரிவித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்