என்னால் ரன்கள் சேர்க்க முடியாததால் பண்ட்டுக்கு இடம் கிடைத்தது – சஹா பெருந்தன்மை!

சனி, 23 ஜனவரி 2021 (16:58 IST)
இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான விருத்திமான் சஹா பண்ட்டுக்கு இடம் கிடைத்தது குறித்து பேசியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர். மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் பண்ட்.

ஆனால் தொடரின் முதல் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கீப்பராக விருத்திமான் சஹா விளையாடினார். ஆனால் அவரால் பெரிதாக பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததால் இரண்டாவது போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கும் பண்ட்டுக்கும் இருக்கும் உறவு குறித்து பேசியுள்ள சஹா ‘நானும் பன்ட்டும் நட்புடனே எப்போதும் பழகுவோம். இதை அவரிடம் கேட்டு வேண்டுமானால் நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ளலாம். எங்களில் யாருக்கு இடம் கிடைத்தாலும் மற்றவருக்கு மனக்கசப்பு இல்லை. நான் என்னுடைய பணியை எப்போதும் போல் செய்துக்கொண்டு இருப்பேன். பண்ட் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறார். என்னால் ரன்கள் சேர்க்க முடியாததலேயே பண்ட்டுக்கு இடம் கிடைத்தது. என்னுடைய திறமையை வெளிப்படுத்த நான் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்