வேல் யாத்திரை ப்ளானில் திடீர் மாற்றம்: அப்டேட் கொடுத்த தமிழக பாஜக!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (09:39 IST)
பாஜகவின் வேல் யாத்திரை டிசம்பர் 6-க்கு பதில் டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிப்பு.  
 
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். 
 
மேலும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் பாஜகவிடன் அடுக்கான கேள்விகளை கேட்டதுடன், பக்தி யாத்திரை என்று அரசியல் யாத்திரை செய்வதாக அளிக்கப்பட்ட டிஜிபி அறிக்கையின் பேரில் கண்டித்தது. 
 
இருப்பினும் தாங்கள் பின்வாங்க போவதில்லை என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் எதிர்வரும் 17 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், டிசம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரை நிறைவுபெறும் என்றும் அறிவித்திருந்தார். 
 
ஆனால், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரையை நிறைவு செய்ய கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் பாஜகவின் வேல் யாத்திரை டிசம்பர் 6-க்கு பதில் டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
மேலும், டிசம்பர் 4 ஆம் தேதி நெல்லையிலும், டிசம்பர் 7 ஆம் தேதி  தூத்துக்குடி திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் வேல்யாத்திரை நடைபெறும் எனவும் தமிழக பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்