கருணாநிதி உடல் நிலை மோசமாகத்தான் இருக்கிறது - உறுதி செய்த திருநாவுக்கரசு

திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (17:09 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உறுதி செய்துள்ளார்.

 
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு கடந்த 10 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயோதிகம், நுரையீரல் தொற்று, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக தொற்று, இரத்தத்தில் தொற்று என பல நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறார். எனினும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்து வந்தது. 
 
இந்நிலையில்தான், கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். கடந்த 10 நாட்களாக மருத்துவமனைக்கு வராத கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை கருணாநிதியின் மூத்த மகன் தமிழரசு கோபாலபுரம் இல்லத்திலிருந்து அழைத்து வந்தார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு இன்று காலை காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமாகத்தான் இருக்கிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நிலை தேறி வீடு திரும்புவார் என பிரார்த்தனை செய்வோம்” எனக் கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்