தேர்வுதான் ரத்து.. பள்ளிகள் வழக்கம்போல உண்டு! – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (12:17 IST)
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 9,10, மற்றும் 11ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தேர்வில் ஆல் பாஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் படித்து வந்தனர். மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு தேர்வின்றி ஆல் பாஸ் அளிப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். தேர்வு கிடையாது என்பதால் பள்ளிகளும் நடைபெறாது என்ற தகவல் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் “மாணவர்களின் வருகைப்பதிவை கணக்கில் கொண்டே மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதால் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் ரத்து செய்யபடாது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும், பாடங்களும் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்