ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு..! விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

Senthil Velan

வியாழன், 11 ஏப்ரல் 2024 (16:53 IST)
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக, காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணை மந்தமாக நடந்து வருவதால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி புகார்தாரரான நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், வழக்கின் புலன்விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

ALSO READ: ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை..! ட்ரோன்கள் பறக்கத் தடை..! பலத்த பாதுகாப்பு...!!
 
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்