ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை என்ன? சென்னை காவல் தகவல்!

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (16:51 IST)
ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.    
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    
 
இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அப்படி ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுள்ளனர். இதுவரை 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
ஆனால், அதே சமயம் ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றங்கள் மட்டுமின்றி சாலை விபத்துக்களும் கணிசமாக குறைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொலைச்சம்பவங்கள் 44%, கொள்ளை நிகழ்வுகள் 75%, திருட்டு சம்பவங்கள் 81%, சாலைப் போக்குவரத்து இறப்பு நிகழ்வுகள் 75% குறைந்துள்ளன. சாலை போக்குவரத்து காய வழக்குகள் 81% குறைவு குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்