சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாகும் விவகாரம்..! தானாக முன்வந்து விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

Senthil Velan

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (17:13 IST)
நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பமாகும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளது.
 
மேற்கு வங்க மாநிலத்தில் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமான விவகாரத்தை தொடர்ந்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
 
குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பல சிறைச்சாலைகளில் 196 குழந்தைகள் சிறையிலேயே பிறந்து காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்கு ஆண் சிறைச்சாலை ஊழியர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விசாரிக்க உள்ளனர்.
 
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் கௌரவ அகர்வால் மற்றும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் ஐஸ்வர்யா பாட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ: களைகட்டிய எருது விடும் விழா..! களத்தில் சீறிபாய்ந்த காளைகள்..!!

மேலும் இக்குழுவில் பெண் சிறை காவல் அதிகாரிகள் சிலரையும் இணைத்து மேற்கொண்டு, என்ன மாதிரியான மேம்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளலாம் என ஆய்வு செய்யுமாறும், இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்தும் தகவல்களை திரட்டி பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்