கர்நாடகாவிலும் பட்டாசு வெடிக்க தடை: அதிர்ச்சியில் வியாபாரிகள்!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:23 IST)
சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்ற காரணத்தினால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் அடிப்படையில் ஏற்கனவே ஐந்து மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி இன்று காலை டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை என அதிரடியாக அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் டெல்லியை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சற்று முன் வெளியான தகவலின்படி கர்நாடக மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்
 
முன்னதாக இது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூட்டத்திற்கு பின்னர் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்
 
ஏற்கனவே ஒடிசா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கர்நாடகாவிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் பட்டாசுகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்