தடையை மீறி தொடங்கியது வேல் யாத்திரை!? – கையில் வேலோடு புறப்பட்ட எல்.முருகன்!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (09:11 IST)
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையை தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருத்தணிக்கு வழிபாட்டுக்கு செல்வதாக சொல்லி சென்னையிலிருந்து புறப்பட்ட பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திடீரென கையில் வேலை தூக்கிக் கொண்டு திருத்தணி நோக்கி புறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் வேலோடு வரும் எல்.முருகனோடு அவரது வீட்டிலிருந்து பாஜகவினர் கோஷம் எழுப்பியபடி உடன் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த பயணம் திருத்தணி வரை மட்டும் தொடருமா அல்லது திட்டமிட்டபடி வேல் யாத்திரையாக உருபெறுமா? திருத்தணியில் எல்.முருகன் வழிபாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசின் தடையை மீறி எல்.முருகன் திருத்தணி புறப்பட்டுள்ள நிலையில் பாஜகவினரும் திருத்தணியில் கூடி வருவதால் காவல் துறை தடுத்து நிறுத்தலாம் என கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்