தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் சினிமா காட்சிகள்: வருகிறது புதிய சட்டம்

ஞாயிறு, 2 ஜூன் 2019 (08:08 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இனி 24 மணி நேரமும் சினிமா தியேட்டர்கள், கடைகள் இயங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது
 
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா இறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த மசோதா அமலுக்கு வருகிறது. அதன்படி சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தினமும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை மாநிலங்கள் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இரவில் பெண் பணியாளர்கள் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண் பணியாளர்கள் சம்மதித்தால் மட்டுமே இரவில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், வாரம் ஒருநாள் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை, நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, ஓவர்டைம் வேலையாக இருந்தால் அதிகபட்சமாக 10.30 மணி நேரம் மட்டுமே வேலை ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது
 
இந்த மசோதாவை முதல்முதலில் நிறைவேற்றிய மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிராவை சேர்ந்துள்ளது. அங்கு 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை திறந்து வைக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது, தமிழகத்திலும் விரைவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இனி 24 மணி நேரமும் சினிமா தியேட்டர்கள், கடைகள் உள்ளிட்டவைகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்