ஒரு பிரியாணி ரூ.190 : ஹோட்டல் முதலாளியை சுட்டுக்கொன்ற கும்பல்

செவ்வாய், 5 ஜூன் 2018 (16:55 IST)
பிரியாணி சாப்பிட்ட தொகையை கொடுக்கும் விவகாரத்தில் ஹோட்டல் முதலாளியை சுட்டுக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 
மேற்கு வங்காளத்தில் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேர் சென்று பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த பின் அதற்கான தொகையை கொடுக்க சென்றுள்ளனர்.
 
அப்போதுதான் ஒரு பிரியாணியின் விலை ரூ.190 என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹோட்டல் முதலாளி சஞ்சய் மண்டலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே கை கலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
 
அப்போது, அந்த நால்வரில் ஒருவர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து சஞ்சயை நோக்கி சுட்டுள்ளார். அவர் கீழே விழுந்தவுடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் அங்கிருந்தவர்கள் சஞ்சயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். 
 
போலீசாரின் விசாரணையில் முகமது பைரோஸ் என்பவர்தான் சஞ்சயை சுட்டிக் கொன்றார் என சஞ்சயின் சகோதரர் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து முகமது பைரோஸை போலீசார் கைது செய்தனர்.  மேலும், தலைமறைவான மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்