ஆட்டக்களம் பற்றி புகார் எதற்கு?-வார்ன்

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (12:00 IST)
இந்திய- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கான்பூரில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டிக்கான ஆட்டக்களம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்க என்ன இருக்கிறது என்று ஷேன் வார்ன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் துவங்கவுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு விளையாடும் ஷேன் வார்ன் செய்தியாளர்களிடையே கூறுகையில், திரும்பும் ஆட்டக்களங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு பதில் இந்தியா வரும் அணிகள் அதில் விளையாட கற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது போன்று ஒரு அணி தங்களது பலத்திற்கு தக்கவாறான ஆட்டக்களத்தை தயாரித்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை. அனைத்து அணிகளும் உள் நாட்டில் தங்களது பலங்களுக்கு தக்கவாறுதான் களங்களை அமைக்கின்றன. இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்காவிலும் ஆஸ்ட்ரேலியாவிலும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆட்டக்களங்களை எதிர்கொள்ளவில்லையா என்ன?

இவ்வாறு கூறியுள்ள ஷேன் வார்ன் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக களங்கள் அமைக்கப்படுமேயானால் அதுவும் நல்லதுதான் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்