கஞ்சா சாக்லேட்.. கஞ்சா கேக்! சென்னையில் கொடிகட்டும் விற்பனை! – போலீஸார் அதிர்ச்சி!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (10:10 IST)
சென்னையில் கஞ்சா கலந்த சாக்லேட் மற்றும் கேக் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக காவல்துறை ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தி தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனையாளர்களை கைது செய்ததுடன், டன் கணக்கில் கஞ்சா, குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தது.

ஆனால் தற்போது கஞ்சா விற்பனை மற்ற உணவு பொருட்களுடன் கலந்து நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதை பொருளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ALSO READ: பத்திரிக்கையாளர்களை தாக்கினார்களா தமன்னாவின் பாதுகாவலர்கள்?

இதுதொடர்பாக அப்பகுதியில் சோதனை நடத்திய போலீஸார் அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் ரோஷன் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாமஸ் என்ற மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கொள்முதல் செய்து அதை கலந்து போதை கேக் தயாரித்து அதை ரூ.3000 வரை விற்றது தெரிய வந்துள்ளது. அதுபோல டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ் போதை மருந்து கலந்த போதை ஸ்டாம்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தது தெரியவந்துள்ளது.

நேரடியாக கஞ்சா விற்பதை தவிர்த்து இதுபோல ரகசியமாக உணவு பொருட்களில் கலந்து விற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்