பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகளா? - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்!

Prasanth Karthick

வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:49 IST)

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதில் தவறில்லை என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் அதிகமான விவசாயம் நடைபெறும் பகுதிகளாக காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளது. விவசாய பகுதிகளான திருவாரூர், நாகப்பட்டிணம் பகுதிகளில் ஏற்கனவே பல இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுத்து வரும் நிலையில், மீத்தேன் திட்டம் கொண்டுவரப்பட இருந்த நிலையில் மக்கள் போராட்டத்தால், டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் சாராத ஆலைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா “தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் எந்த தவறுமில்லை. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுசூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வரலாம்” எனக் கூறியுள்ளார். இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சில தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிகிறது. ஆனால் என்ன மாதிரியான தொழிற்சாலைகள் அவை என்பது குறித்து அவர் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்