காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் உடல் தோண்டி எடுப்பு

வெள்ளி, 3 ஜனவரி 2014 (16:24 IST)
திருமணத்துக்கு மறுத்ததால் காதலனால் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் சடலம் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
FILE

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சசிகலா. கோதவாடி மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மாயமானார். அவருடன் வேலை செய்த மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வினோத் என்பவரும் மாயமானார்.

இதையடுத்து, சசிகலாவின் தந்தை பட்டுராஜன் அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி மகளிர் போலீசார் தலைமறைவாக இருந்த வினோத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது, சசிகலாவை வினோத் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. வினோத் அளித்த வாக்குமூலத்தில், சசிகலாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவள், திருமணத்துக்கு மறுத்ததால் அடித்து கொலை செய்தேன்.

கோவை ஈச்சனாரி அருகே மலுமிச்சம்பட்டியில் எல் அன்ட் டி பைபாஸ் ரோடு அருகே சடலத்தை புதைத்துவிட்டேன் எனக் கூறினார். இதையடுத்து, கோவை தெற்கு தாசில்தார் முரளி கிருஷ்ணன் அனுமதியின் பேரில், கோவை அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயசிங் தலைமையில் மருத்துவக்குழுவினர் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு சென்று புதைக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்தனர். அங்கு பிளாஸ்டிக் வளையல்கள் உடைந்து கிடந்தது. முகம் முற்றிலும் கோரமாக சிதைக்கப்பட்டிருந்தது.

அங்கேயே பிரேத பரிசோதனை நடந்தது. சில பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்