தமிழக மீனவர்களை உயிருடன் மீட்க பிரதமருக்கு வைகோ கடிதம்

வியாழன், 23 ஜூன் 2011 (12:03 IST)
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமரு‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், மிகுந்த வேதனையோடு, துயரத்தோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன். டெல்லியில் நான் உங்களை சந்தித்தபோது, இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் உயிருக்கு, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று மனுவாக எழுதி கொடுத்தேன்.

அதுபோல பல மனுக்கள் கொடுத்தும் சாதகமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போது, 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், 20ஆ‌‌ம் தேதி சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ராமே‌ஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த இந்த மீனவர்கள், மோட்டார் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக, தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த முடியவில்லை. இந்த நேரத்திலாவது இந்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்களும் மீனவர்களின் வாழ்க்கையை நினைத்து வேதனை அடைந்துள்ளனர். எனவே, சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உயிருடன் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்