யானை கூட்டத்தில் சிக்கிய ஊழியர்: ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பினார்
யானை கூட்டத்திடம் சிக்கிய ரேசன் கடை ஊழியர், தலைக்கு ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்தப்பினார். இந்த வினோத சம்பவம் ஈரோடு அருகே உள்ள அந்தியூரில் நடந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் முபாரக். இவரும் சின்னசாமி என்பவரும் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்தனர். இவர்களுடன் பொம்மையன், ராஜ்குமார் ஆகிய இருவரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
தற்போது அந்தியூர் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதியில் உள்ள யானை கூட்டங்கள் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையை கடந்து அங்குள்ள ஒரு குட்டைக்கு தண்ணீர் குடிக்க செல்லும்.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் முபாரக் வந்துகொண்டிருந்தபோது ஒரு வளைவில் திரும்பினார். அப்போது சாலையில் ஒரு குட்டி யானையும் ஐந்து பெரிய யானைகளும் விளையாடிக் கொண்டிருந்தது.
வளைவில் இருசக்கர வாகனம் திரும்பியபோது குட்டியானை மீது மோதி விழுந்தது. இதில் சின்னசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் முபாரக் மாட்டிக் கொண்டார். குட்டியானை அலரியதால் மற்ற யானைகள் முபாரக் இருசக்கர வாகனம் அருகில் வந்து சூழ்ந்துகொண்டது.
இதனால் முபாரக் அச்சமடைந்தார். ஒரு யானை முபாரக் மீது கால் வைக்க தன் முன்னங்கால்களை தூக்கி வைத்துள்ளது. இருசக்கர வாகனத்தின் சைலன்சரில் சூடுபட்டதால் தன் காலை எடுத்துவிட்டது. மற்றொரு யானை தன் துதிக்கையால் முபாரக் தலையை பிடித்துள்ளது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதனால் பிடிக்க முடியவில்லை.
சுமார் அரைமணிநேரம் இப்படி இருக்க அந்த வழியாக ஒரு லாரி வந்துள்ளது. லாரியின் சத்தம் கேட்டு அந்த யானை கூட்டங்கள் பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டது. அதன்பின் முபாரக்கை அவரது நண்பர்கள் காப்பாற்றியுள்ளனர்.