இலங்கைத் தமிழர் பிரச்சனை: வழக்கறிஞர்கள் காலவரையின்றி நீதிமன்ற புறக்கணிப்பு
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்வதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இருந்த பலர் ஒரு நாள் மட்டும் நீதிமன்றம் புறக்கணிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். பெரும்பாலானோர் காலவரையின்றி போராட்டம் நடத்த வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து காலவரையின்றி போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில், இந்தியர்களின் உறவுகளான ஈழத் தமிழ் மக்களை அழிக்க டாங்கிகளையும், ஏவுகணைகளையும் சிங்கள தேசத்திற்கு பிரணாப் முகர்ஜி எடுத்து செல்வதற்கு இந்த வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் 5 லட்சம் தமிழ் மக்களின் உண்மை நிலையை அறிய சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
இதற்கு உலக நாடுகளும், ஐ.நா. சபையும் சிங்கள அரசை வற்புறுத்த வேண்டும். மேற்கூறிய காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் 30ஆம் தேதி (இன்று) முதல் காலவரையின்றி அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மீண்டும் வரும் திங்கட்கிழமை பொதுக்குழு கூட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.