இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரியும் சென்னையில் இன்று மாணவர்கள் உண்ணாவிரதமும், சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னை தியாகராயர் கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்றோ சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணுவ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, ''எங்களை கைது செய்தாலும் போராட்டம் தொடரும்'' என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னை பாரிமுனையில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினார்.