இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி படங்கள் அவமரியாதை: தி.க. பிரமுகர் கைது
ஈரோடு அருகே இந்திராகாந்தி. ராஜீவ்காந்தி படங்களுக்கு செருப்பு மாலை அணிந்த திராவிடர் கழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் காந்தி மைதானத்தில் காங்கிரஸ் கொடி கம்பத்தின் அருகில் சில மர்ம ஆசாமிகள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் படங்களை வைத்து செருப்பு மாலை அணிந்திருந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதை கண்டித்து ஈரோடு விடியல் சேகர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி படங்களை அவமரியாதை செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில் இந்த செயலில் ஈடுபட்ட அந்தியூர் சமத்துவபுரத்தில் உள்ள திராவிடர் கழகத்தை சேர்ந்த குருசாமி (40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக இருமுறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.