வழிப்பாதை அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி உட்பட 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள நல்லாக்கவுண்டன்பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இதன் அருகே குரங்கன்குட்டை என்ற பள்ளம் உள்ளது. இப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் எனில் இந்த குட்டையில் இறங்கித்தான் செல்லவேண்டும். இதனால் வழிப்பாதை அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதை வலியுறுந்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தடையை மீறி மறியல் செய்யதிட்டமிட்டதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமியை காவல்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
இதை அறிந்த அப்பகுதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 59 பெண்கள் உட்பட 102 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.