இலங்கை தமிழர் பிரச்சனை: ராமதாஸ்-தா.பாண்டியன் முக்கிய முடிவு அறிவிப்பு
புதன், 28 ஜனவரி 2009 (09:39 IST)
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது என்றும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறரை கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாசும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனும் நேற்று மாலை சந்தித்து பேசினர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் திடீரென நடந்த இந்த சந்திப்பு மாலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை நீடித்தது.
இந்த சந்திப்பின் போது பா.ம.க. தலைவர் கோ.க.மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி, மாநில துணை செயலர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சோழன் நம்பியார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தாங்க முடியாத துக்க செய்தியாக உள்ளது.
அதனால் ஏதாவது செய்ய வேண்டும், அமைதியாக இருக்க முடியாது என்பதால் ஒத்த கருத்துள்ள தலைவர்களை சந்தித்து என்ன செய்யலாம்? என ராமதாசை சந்தித்து ஆலோசித்தேன். அவரும் ஆழ்ந்த வேதனையில்தான் இருக்கிறார்.
ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் நாளை (இன்று) சென்னையில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறரை கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் என்றார்.