மாமியாரை கொன்ற மருமகள், கள்ளக் காதலனுக்கு ஆயுள்
ஈரோடு அருகே கள்ளக் காதலுக்கு உடந்தையாக இருந்த மாமியாரை கொலை செய்த மருமகள், அவரது கள்ளக் காதலன் ஆகிய இருவருக்கு ஈரோடு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள வெள்ளியம்பாளையத்தில் வசித்து வருபவர் அய்யாசாமி (40). இவரது மனைவி ஜோதி (37). இவர்கள் வீட்டிற்கு அய்யசாமி நண்பர் சிவராமன் (28) அடிக்கடி வந்து செல்வார்.
இவருக்கும் ஜோதிக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது. அய்யாசாமி இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்தனர். இவர்கள் நெருக்கத்தை இவரது மாமியார் அய்யம்மாள் நேரில் பார்த்துவிட்டார். உடனே இவர்கள் இருவரையும் கண்டித்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
பயந்துபோன இவர்கள் கள்ளக் காதல் விவகாரத்தை தன் மாமியார் கணவரிடம் கூறிவிடுவார் என பயந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியார் அய்யம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கில் சிவராமன், ஜோதியை ஊத்துக்குளி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய ஈரோடு விரைவு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.