பிரணாப்பை இலங்கைக்கு உடனே அனுப்ப வேண்டும்: தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
சனி, 27 டிசம்பர் 2008 (17:25 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் தி.மு.க.வுக்கு 10-வது முறையாக கருணாநிதி தலைவராகவும் மற்றும் பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடக்கும் ஆண்டாகவும் அமைந்ததற்கு பொதுக்குழு பெருமிதம் கொள்கிறது. ஜனவரியில் தொடங்க உள்ள கியூபா புரட்சி பொன்விழாவை தி.மு.க பொதுக்குழு வரவேற்று வாழ்த்துகிறது.
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை இனிப்புடன் கொண்டாட, சர்க்கரை பொங்கல் செய்வதற்கான பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்களை இலவசமாக வழங்க உத்தரவிட்ட முதல்வரை பொதுக்குழு வாழ்த்துகிறது.
பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஒடுக்க இரண்டு சட்டங்களை வரவேற்பதுடன், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எந்த வகையிலும் ஊறு ஏற்படாமலும் மாநில உரிமைகளில் குறுக்கிடாத, தனி மனித சுதந்திரத்தை காயப்படுத்தாத வகையிலும் அந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஜெயலலிதா பொய்ப் பிரச்சாரம்
இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் வழங்கிய நன்கொடை மூலம் உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கே கொல்லப்படுவது தமிழர்கள் இல்லை, விடுதலைப்புலிகள்தான் என்று திசை திருப்பும் முயற்சியாக பொய்ப் பிரசாரம் செய்து வரும் ஜெயலலிதாவின் போக்கு கண்டிக்கத்தக்கது.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அதற்கு முன்னோடி நடவடிக்கையாக போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க பிரதமர் ஒப்புக் கொண்டார். அதன்படி, பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமரையும், மத்திய அரசையும் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்
தமிழகத்தில் இனி புதிய மதுக்கடைகள் திறப்பதில்லை என்றும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தும் ஆணையிட்ட முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், முழு மதுவிலக்கு திட்டத்தை நோக்கி அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
வெள்ள நிவாரண பகுதிகளை பார்வையிட்டு சென்ற மத்திய குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்துக்கு வழங்குவதாக கூறிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,500 என நிர்ணயம் செய்ததற்கு நன்றி தெரிவிப்பதோடு வரும் ஆண்டில் கரும்பிற்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.