சாமுயெல்ஸ் மீது விசாரணைக்கு ஐசிசி உத்தரவு

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (11:45 IST)
கிரிக்கெட் சூதாட்டக்காரர் ஒருவருக்கு தகவல்களை அளித்த புகார் தொடர்பாக மேற்கிந்திய வீரர் மர்லான் சாமுயெல்ஸ் மீது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்துமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி நாக்பூரில் நடைபேற்ற ஒரு நாள் போட்டிக்கு முன்னர் முகேஷ் கோச்சார் என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரருக்கு மேற்கிந்திய அணி பற்றிய தகவலை மர்லான் சாமுயெல்ஸ் அளித்தார் என்று நாக்பூர் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

துபாயில் நடைபெற்ற ஐசிசியின் 2 நாள் கூட்டத்தில் சாமுயெல்ஸ் மீதான புகார் அறிக்கை விவாதிக்கப்பட்டது. ஐசிசி நடத்தைக் கண்காணிப்பு பிரிவு தலைவர் மைக்கேல் பெலாஃப், இந்த விஷயத்தில் சாமுயெல்ஸ் ஐசிசி நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்றும் மேற்கிந்திய வாரியம் உடனடியாக இதன் மீதான விசாரணையை துவக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த விசாரணை அறிக்கையை மேற்கிந்திய வாரியம் ஜனவரி 31, 2008ம் தேதிக்குள் ஐசிசியிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐசிசி விசாரணைக் குழு முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்