கர்நாடகாவில் புதிய அரசு நேற்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சர்களில் சிலருக்கு குற்றப்பின்னணி இருப்பதாக அம்மாநில ஆளுநர் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தாம் முன்னமே தெரிவித்து, அவர்களை அமைச்சர்களாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் யார் யார் அமைச்சர்களாக வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முன்பே முடிவெடுத்துவிட்டதாக தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
இதனால், நிர்வாகத்தை தூய்மைபடுத்துவதற்கான முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் அமைச்சர்களாவதை நாட்டு மக்கள் ஏற்பதில்லை என்றாலும், அவ்வாறு நிகழ்வதை ஒரு ஆளுநராக தன்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று பரத்வாஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே, ஆட்சி அமைப்பதற்கான உரிமை பெற்றவர்கள் தந்த பட்டியலில் உள்ளவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறியுள்ளார்.