மராட்டிய புதிய முதல்வர் யார்? இன்று தேர்வு

சனி, 24 அக்டோபர் 2009 (10:48 IST)
மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தனிப் பெரும் கட்சியாக வந்துள்ள காங்கிரஸ், இன்று புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறது.

மராட்டியத் தலைநகர் மும்பையில் இன்று புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனி, மாநிலங்களவைத் துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், மராட்டிய மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் சஞ்சய் தத் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

தற்போது முதல்வராக இருக்கும் அசோக் சவான் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. நேற்று மாலை அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்புப் பேசியதற்குப் பிறகு, முதல்வர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறவித்துவிட்டார். இதனால் சவான் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டத் தேசியவாத காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளில் வென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்