உணவுதானிய கையிருப்பு திருப்தி - சரத்பவார்

திங்கள், 29 ஜூன் 2009 (11:27 IST)
மும்பை: நாடு முழுவதும் பருவமழை தாமதமான போதிலும், வறட்சி நிலை ஏதுமில்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் கூறியிருக்கிறார்.

நாட்டில் பரவலாக பருவ மழை தாமதமாகி இருக்கிறது. வடமாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விட குறைவாகவே இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனால் வேளாண் பயிர் சாகுபடியில் எதிர் விளைவுகள் ஏற்படும் என்றும், அதன் காரணமாக பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், பருவமழை தாமதம் ஆன போதிலும், வறட்சி போன்ற நிலைமை இல்லை என்று கூறினார்.

விதை விதைப்பதில் ஒரு வாரம் தாமதமாகலாம். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறிய அவர், உணவு தானிய உற்பத்தி கடந்த ஆண்டைப் போலவே இருக்கும் என்றார்.

2008-09 பயிர் ஆண்டில் நாட்டில் 23 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் உணவு தானிய இருப்பு திருப்திகரமாக உள்ளதாகவும், 5 கோடி டன்களுக்கும் அதிகமான அரிசி, கோதுமை நடப்பு சீசனில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்