முல்லை பெரியாறு அணை பிரச்சனையை தீர்ப்பார் பிரதமர் : கருணாநிதி

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (14:32 IST)
முல்லைப் பெரியாறு அணை பிரசனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங் ஒரு திட்டம் வைத்திருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்று முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது பற்றியும், இந்த விஷயத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிடாவிட்டால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது குறித்தும் பிரதமரிடம் தாம் வலியுத்தியதாக கூறினார்.

இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக பிரதமர் தம்மிடம் தெரிவித்தாக குறிப்பிட்ட முதலமைச்சர் கருணாநிதி, இது பற்றி இரு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனையில் தீவிரமாக ஆலோசித்தப்பின்தான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று பிரதமர் தம்மிடம் உறுதியளித்திருப்பதாக அவர் கூறினார்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அமைக்கப்பட்டுள்ளது போல், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்