தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
PUTHINAM
நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2:00 மணி முதல் 3:00 மணி வரை நடந்தது என்று புதினம் இணையத் தளம் தெரிவிக்கிறது.
இலங்கையின் இனப் பிரச்சனையில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பங்கு முக்கியமானது என்ற அடிப்படையில், தமிழர்கள் மீது சிறிலங்கா கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்குரிய கடமை இந்தியாவிற்கு உள்ளது என இதில் வலியுறுத்தப்பட்டது.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் மக்கள், கோரிக்கை பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
- போர் நிறுத்தத்தின் அவசியம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைய நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்.
- ஐ.நா. உதவி நிறுவனங்கள், சர்வதேச உதவி நிறுவனங்கள், சர்வதேச கண்காணிப்பாளர்கள், பத்திரிகையாளர்களை வன்னிக்குள் செல்ல அனுமதித்தல் வேண்டும்.
- தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.
- தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தின் இறுதியில் நார்வேக்கான இந்தியத் தூதர் பான்பிட் ஏ. ராய்-இடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான கோரிக்கை மனு வழங்கப்பட்டது.