ஒலிம்பிக் சுடருக்கு இடையூறு செய்யவேண்டாம்: தலாய் லாமா!

வியாழன், 12 ஜூன் 2008 (13:48 IST)
ஒலிம்பிக் சுடர் அடுத்த வாரம் திபெத் தலை நகர் லாசா வழியாக எடுத்துச் செல்லப்படவுள்ளது. அப்போது திபெத்தியர்கள் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எந்த வித இடையூறையும் செய்யவேண்டாம் என்று தலாய் லாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள தலாய் லாமா நேற்று சிட்னியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

துவக்கத்திலிருந்தே ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாம் ஆதரவு அளித்து வந்துள்ளோம், ஒலிம்பிக் சுடர் ஓட்டம் என்பதும் அதில் ஒரு பகுதி. சீன சகோதரர்களும், சகோதரிகளும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை பெரும் கௌரவமாக கருதுகின்றனர். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இதனால் இடையூறுகள் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார் தலாய் லாமா.

தற்போது சீனாவுடன் நடந்து வரும் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும் என்று கூறிய தலாய் லாமா, அதன் பிறகு தான் திபெத் திரும்பலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்