விடுதலைப் புலிகள் பதிலடி : 25 படையினர் பலி!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (21:21 IST)
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்தினருக்கும் இன்று நடந்த கடும் மோதலில் ராணுவத்தினர் 25 பேரும், புலிகள் 7 பேரும் பலியாகியுள்ளனர்!

தங்களுடைய படைத் தளத்தில் இருந்து ஆல்டிலரி, மார்ட்டர், பல்குழல் பீரங்கி தாக்குதல்களை நடத்திக் கொண்டு இன்று அதிகாலை சிறிலங்க ராணுவத்தினர் முன்னேறி வந்ததாகவும், அவர்களை இடைமறித்து குறிசுட்டகுளம், பாலைக்குழி, கட்டுக்கரைக்குளம் ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், 7 மணி நேரம் நீடித்த இந்தச் சண்டையில் தங்கள் தரப்பில் 7 பேரும், சிறிலங்க ராணுவத்தினல் 25 பேரும் கொல்லப்பட்டதாகவும், மேலும் 60 ராணுவத்தினர் காயமடைந்ததாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், சிறிலங்க சிப்பாய் ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றியது மட்டுமின்றி, 4 துப்பாக்கிகள், 4 ஆர்.பி.கள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து தகவலளித்த சிறிலங்க ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, விடுதலைப்புலிகள் 8 உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், மொத்தம் 31 புலிகள் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டு, 17 பேர் படுகாயமுற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முகமாலை என்ற இடத்தில், தங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேற முயன்ற சிறிலங்க ராணுவத்தினரை தாக்குதல் நடத்தி முன்னேற்றத்தை முறியடித்ததாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்