குவட்ரோச்சி விடுதலை : இத்தாலி திரும்பினார்

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (10:27 IST)
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ுவட்ரோச்சியை அர்ஜென்டினா நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து அவர் தனது சொந்த நாடான இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றார்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குவட்ரோச்சிக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அளிக்க இந்தியா தவறிவிட்டது. எனவே அவரை நாடு கடத்த தடை விதிப்பதாகவும், அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதாகவும் அர்ஜென்டினா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தாலிய தொழிலதிபரான ஒட்டாவியோ குவாத்ரோச்சி மீது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை இந்தியா கொண்டவர மத்திய புலனாய்வுக் கழகம் கடந்த 22 ஆண்டுகளாக போராடியது. அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்து சர்வதேச அமைப்பான இன்டர்போலின் உதவியை நாடியது.

இதனிடையே அர்ஜென்டினாவின் இகாசு விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வந்த குவட்ரோச்சியை அர்ஜென்டினா காவல்துறையின் உதவியுடன் இன்டர்போல் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய புலனாய்வுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அர்ஜென்டினா சென்றனர். இந்த வழக்கு எல்டார்டோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

மத்திய புலனாய்வுக் கழகத்தினர் குவட்ரோச்சிக்கு எதிராக போதுமான ஆதாரத்தை சமர்பிக்க தவறியதால் குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடகடத்த நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் குவட்ரோச்சி மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டு கடந்த வாரம் அவரின் கடவுச் சீட்டு திருப்பி கொடுக்கப்பட்டது. வழக்கில் இருந்து விடுதலையான குவட்ரோச்சி நேற்று தன்னுடைய சொந்த நாடான இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்