மன்னாரில் கடும் மோதல் : ராணுவத்தினர் 16 பேர் பலி, 45 பேர் காயம்!

Webdunia

ஞாயிறு, 15 ஜூலை 2007 (12:49 IST)
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் முன்னேறியதை அடுத்து ஏற்பட்ட கடும் சண்டையில் ராணுவத்தினர் 16 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர்!

புலிகளின் கட்டுப்பாட்டில் தம்பனை எனும் பகுதியை நோக்கி ஆர்டிலரி குண்டுகளை சுட்டுக் கொண்டு சிறிலங்க ராணுவம் முன்னேறியதாகவும், அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்று மாலை 5 மணி வரை நடந்த கடும் சண்டையில் ராணுவத்தினர் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட ராணுவத்தினரின் 4 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இச்சண்டையில் 3 விடுதலைப் புலிகள் பலியானதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.

இச்சண்டையில் ராணுவத்தின் கவச வாகனம் ஒன்று சேதமடைந்ததாகவும், தளபாடங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம், வவுனியா - மன்னார் எல்லையில் நடந்த கடும் சண்டையில் 10 ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளின் பல நிலைகளை அழித்ததாகவும், இத்தாக்குதலில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்