நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஜெகன்மோகன் ரெட்டியின் விலகலால் ஆந்திர காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் தக்கவைத்துக்கொள்ளவும், பிற கட்சியிலிருந்து இழுக்கவும் தொடங்கியுள்ள பேரங்கள் போன்றவை அம்மாநில அரசியலை தகிதகிப்பில் தள்ளியுள்ளது.
ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தை தொடர்ந்து, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்துமாறு கேட்டார் அவரது மகனான ஜெகன்மோகன் ரெட்டி. அது நடக்கவில்லை.
அடுத்து தனக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பார்த்தார்.தனியாக ஆறுதல் யாத்திரையெல்லாம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி பார்த்தார் ஜெகன்.
அப்படியும் காங்கிரஸ் தலைமை மசியாததால், தனது "சாக்ஷி' தொலைக்காட்சியில் சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ராகுல்காந்தியை விமர்சித்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வைத்தார்.
இது ஆந்திர காங்கிரஸில் கொந்தளிப்பை ஏற்படுத்த, இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ரோசய்யா.
இதனையடுத்து தமக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கனவு காணத்தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டியை நியமித்தது காங்கிரஸ் மேலிடம்.
அத்துடன் ஜெகன்மோகன் ரெட்டியின் மிரட்டலை சமாளிக்க, சிரஞ்சீவி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி, அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இவற்றையெல்லாம் அறிந்த பின்னர்தான் "சீ... சீ... இந்த பழம் புளிக்கும்" என்ற கதையாக இனியும் காத்திருப்பதில் பயனில்லை; தமது மிரட்டலும் எடுபடவில்லை என்பதை புரிந்துகொண்டு, தனது கடப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் நேற்று ராஜினாமா செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி.
அது தொடர்பாக கட்சித்தலைவி சோனியா காந்திக்கு ஐந்து பக்கங்களுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதி அனுப்பிய ரெட்டி, காங்கிரஸ் கட்சி தமது குடும்பத்தை அவமதித்துவிட்டதாகவும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் புலம்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, தமக்கு ஆதரவாக 30 க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி திரள்வார்கள் என்றும் அறிவித்தார்.
ஆனால் இருப்பதை இழந்து பறப்பதை பிடிக்க எண்ணக்கூடாது என்று நினைத்தார்களோ அல்லது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கத்துக்குட்டியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியால் அரசியல் பண்ணி வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் வந்ததோ என்னவோ, ரெட்டியின் ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட எம்.எல்.ஏ.க்களில் பலர் ஜகா வாங்கத்த்தொடங்கினர்.
கூடவே இன்று காலை அனைத்து எம்.எல்.ஏக்களுமே கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அறிவிக்க, ரெட்டி அதிர்ச்சிக்குள்ளானார்.
ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டி விலகினால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இழப்பை ஈடுகட்ட சிரஞ்சீவி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏக்களிடத்தில் பிளவை ஏற்படுத்த, ரெட்டியின் சித்தப்பாவுக்கு அமைச்சர் பதவி தருவதாக கூறி பேரத்தை நடத்தி வருகிறது.
எனவே இதற்கு பதிலடியாக சிரஞ்சீவி ஆதரவு எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுக்க, ஜெகன்மோகன் ரெட்டியும் பேரத்தை தொடங்கிவிட்டதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில், ஆந்திர அரசியலில் அனல் அடிக்கத் தொடங்கியுள்ளது.
சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் வரை ரெட்டியின் வலையில் வீழ்ந்துவிட்டதாகவும், இன்னும் 6 பேரை மட்டும் இழுத்துவிட்டால் அக்கட்சியில் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் ஜெகன் தீவிரமாக முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரசியலை ஆட்டி படைக்கும் ரெட்டி சகோதரர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஆட்டை கடித்து, மாட்டை கடித்த கதையாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் பக்கமும் ஜெகன்பார்வை திரும்பியுள்ளதாகவும், அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஜெகன் வளையில் விழுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவுதான் என்றாலும், சர்வபலம் வாய்ந்த கர்நாடக ரெட்டி சகோதரர்களின் பணபலம் எதையும் வீழ்த்திவிடும் என்றும் ஒரு பேச்சு அலையடிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் ஜெகனுக்கு கர்நாடக ரெட்டி சகோதரர்கள் உதவுவதன் பின்னணியில், டெல்லி பா.ஜனதா மேலிடத்தின் மறைமுக ஆசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த முறை ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜனதா, அம்மாநிலத்தில் வலுவாக காலூன்றுவதற்கான ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது.
எனவே ஜெகன் தனிக்கட்சி என்று பேசி வருகிறபோதிலும், அவரை தங்கள் கட்சிக்குள் வளைத்துப்போட்டு ஆந்திர மாநில பா.ஜனதா தலைவராக்கலாமா என்ற கோணத்திலும் அக்கட்சி யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால், காங்கிரஸ் வட்டாரம் சற்று ஆட்டம் கண்டுதான் உள்ளது!