டியூட்டி டிராபேக்கை அதிகரிக்க வேண்டும் : ஏற்றுமதியாளர்கள்!

சனி, 15 டிசம்பர் 2007 (12:49 IST)
ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரியை திரும்ப கொடுப்பதை மேலும் மூன்று விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரியுள்ளனர்.

அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சென்ற ஆண்டு அக்டோபர் முதல் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் நஷ்டம் அடைவதாக கூறி வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் போட்டியை சமாளிக்க மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுமதியாளர்கள் செலுத்திய விற்பனை வரி, உற்பத்தி வரி, சேவை வரி போன்றவற்றை “வரி திரும்ப கொடுக்கும் திட்டத்தின் " படி திருப்பி கொடுக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் அந்நியச் செலவாணி சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால், ஏற்றுமதியாளர்களுக்கு வரியை திரும்ப கொடுக்கும் திட்டத்தின் (Duty Drawback) படி, திரும்ப கொடுக்கும் வரி விகிதங்களை அதிகப்படுத்தியது. இதை மேலும் உயர்த்த வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஏ.சக்திவேல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“பின்னலாடை ஏற்றுமதி குறைந்தும், ரூபாயின் மதிப்பு அதிகரித்த போது திரும்ப கொடுக்கும் வரியின் அளவை 1 விழுக்காடு உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இது நெருக்கடியில் சிக்கியிருந்த ஏற்றுமதியாளர்களுக்கு உதவிகரமாக இருந்தது. உங்களின் ஆலோசனைப்படி சர்வதேச சந்தையில் போட்டியை சந்திக்கும் வகையில் எல்லா வழிகளிலும் உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் படி பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

ஏற்றுமதிமதியாளர்களிடம் இருந்து வசூலித்த வரியை திரும்ப கொடுப்பதை மேலும் 3 விழுக்காடு அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் ஒரு வருடத்திற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 42 ஆக நிர்ணயிக்க வேண்டும” என கடிதத்தில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்