மாய்டாஸுக்கு வேலை கொடுத்ததில் தவறில்லை-காங்

திங்கள், 19 ஜனவரி 2009 (19:20 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ராமலிங்க ராஜுவின் மகனுக்கு சொந்தமான மாய்டாஸ் இன்ப்ராக்சர் நிறுவனத்திற்கு, உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த ஒப்பந்த முறையில் வேலை கொடுத்ததில் தவறில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ராமலிங்க ராஜு, அவரது தம்பியும் மேலாண்மை இயக்குராக இருந்த ராம ராஜு, தலைமை நிதி அதிரிகாரி சீனிவாஸ் ஆகிய மூவரும், கணக்குகளில் ரூ.7,100 கோடி முறைகேடு செய்யததாக கூறி கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராமலிங்க ராஜுவின் மகன்களுக்கு சொந்தமான மாய்டாஸ் இன்ப்ராக்சர், மாய்டாஸ் புராபர்ட்டி ஆகிய இரண்டு நிறுவனங்களையும், சத்யம் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு செய்த முயற்சியில் பிரச்சனை எழுந்தது.

இதனை அடுத்து நடந்த பல சம்பவங்களால், சத்யம் கம்ப்யூட்டர் கணக்குகளில், கடந்த ஏழு ஆண்டுகளாக செயற்கையாக வருவாய், இலாபம் காண்பிக்கப்பட்டுள்ளது என்று ராமலிங்க ராஜு தானாகவே செபி உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு கடிதம் எழுதினார். அத்துடன் இதன் சேர்மன் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். தற்போது இதன் நிர்வாகத்தை நடத்த மத்திய அரசு ஆறு இயக்குநர்களை நியமித்துள்ளது.

இந்நிலையில் ராமலிங்க ராஜுவின் மகனுக்கு சொந்தமான மாய்டாஸ் இன்ப்ராக்சர் நிறுவனத்தின் தகுதி, நிதி நிலையை ஆராயமலேயே பல உள்கட்டமைப்பு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில பொறுப்பாளர் வி.அருண்குமார் கூறுகையில், இந்த நிறுவனம் பா.ஜ ஆட்சியில் உள்ள குஜராத். மத்திய பிரதேசம், இடதுடசாரி கட்சிகளின் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற ஒப்பந்த பெற்றதில் தவறில்லை. ஆனால் ஆந்திரா மாநிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் பற்றி, எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்புகின்றன.

இந்த கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தகவல் பெறும் உரிமை சட்டப்படி, வேண்டிய தகவல்களை கேட்டு பெறலாம்.

மாநில அரசு இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் கொடுத்ததில் எவ்வித ஒழிமறைவும் இல்லை. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மாநில அரசு பல்வேறு பணிகளை கொடுத்துள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவே, எதிர்க்கட்சிகள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன என்று கூறினார்.

2004-05 முதல் மாய்டாஸ் இன்ப்ராக்சர் நிறுவனத்தின் வளர்ச்சி கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் சாலை, நீர் பாசனம், துறைமுகம். பெட்ரோலிய துறை போன்றவைகளில் பல கட்டுமான பணிகளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்