வளர்ச்சியை அதிகரிக்க கூடுதல் செலவு-அரசு கோரிக்கை

வியாழன், 18 டிசம்பர் 2008 (18:20 IST)
புது டெல்லி: பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.42,480 கோடி செலவழிக்கும் ஒப்புதலை மாநிலங்களவையில், மத்திய அரசு கோரியுள்ளது.

மாநிலங்களவையில் இரண்டாவது துணை மானிய கோரிக்கை மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இதில் கூடுதலாக செலவினங்களுக்கு ரூ.55,604.83 கோடி ஒதுக்கும் படி அரசு கோரியுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.42,480.10 கோடியும் அடங்கும்.

இதையம் சேர்த்து 2008-09 நிதி ஆண்டின் செலவினங்களுக்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக அரசு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை மத்திய அரசு கோரியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இருப்பதை விரைவுபடுத்த, உற்பத்தி வரி குறைப்பு, அரசு கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி செலவழிக்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு கூடுதல் செலவினங்களுக்காக துணை மானிய கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இன்று மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகார துணை அமைச்சர் வி.நாராயாணசாமி தாக்கல் செய்த இந்த துணை மானிய கோரிக்கையில், நெருக்கடியில் இருக்கும் ஜவுளி துறையை நவீனமயமாக்க ரூ.1,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.7,500 கோடி ஒதுக்கப்படும்.

மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட, முதல் துணை மானிய கோரிக்கையில் ரூ.1 லட்சம் கோடியை கோரியது.
இரண்டாவது துணை மானிய கோரிக்கைகளில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடியை செலவினங்களுக்கு ஒதுக்கும் படி கோரியது.

இரண்டாவது துணை மானிய கோரிக்கைகளில் கூடுதலாக ரூ.26,265 கோடி திட்டம் சார்ந்த செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவு, உரம், பாதுகாப்பு துறை வீரர்களின் ஓய்வுதியம் ஆகியவைகளுக்காக ரூ.16,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்