ஜீவன் ஆஸ்தா காப்பீடு திட்டத்தில் சண்டிகர் முதலிடம்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:55 IST)
சண்டிகர்: இந்திய காப்பீடு கழகம் அறிமுகப்படுத்தி உள்ள, ஜீவன் அஸ்தா திட்டத்தில் காப்பீடு செய்வதில் சண்டிகர் மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.

இது குறித்து சண்டீகர் மண்டல முதுநிலை மேலாளர் ரகுபால் சிங் கூறுகையில், இந்திய காப்பீடு கழகம் ( எல்.ஐ.சி) அறிமுகப்படுத்தி உள்ள புதிய காப்பீடு திட்டமான ஜீவன் அஸ்தா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதில் வடக்கு பிராந்தியத்தில் சண்டீகர் மண்டலம் முதல் இடத்தை வகிக்கிறது.

இந்த காப்பீடு அறிமுகப்படுத்திய முதல் நாளிலேயே 802 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் முதல் தவணை தொகையாக ரூ.2.17 கோடி பெறப்பட்டுள்ளது.

சண்டீகர் மண்டலத்தில் இரண்டு லட்சம் ஜீவன் அஸ்தா காப்பீடுகளை விற்பனை செய்து, அதன் மூலம் ரூ.500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய காப்பீடு கழகம் இந்த புதிய காப்பீடு திட்டத்தின் படி ரூ.25 ஆயிரம் கோடி தவணை தொகையாக திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஜீவன் அஸ்தா திட்டத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் காப்பீடு செய்ய துவக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு மட்டும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 5 வருடம் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு, ரூ.90 வருவாய் கிடைக்கும். இதே போல் 10 வருடம் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.100 உறுதியாக வருவாய் கிடைக்கும்.

இதில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்து கொள்ளும் தொகைக்கு உச்சவரம்பு இல்லை என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்