மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 8-வது ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு இந்த ஆண்டு தாமதமாகி வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வெளியாகும் இந்த அறிவிப்பு, ஏப்ரல் மாதம் தொடங்கியும் இன்னும் வெளியாகவில்லை.
இந்த தாமதத்திற்கு ஐந்து முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன: 8-வது ஊதியக்குழுவின் புதிய மாற்றங்களுடன் அகவிலைப்படியை இணைப்பதில் உள்ள நிர்வாக சிக்கல்கள், நிதி அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகள், நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை துல்லியமாக கணக்கிடுதல், நிலுவை தொகையை ஊதியத்துடன் ஒருங்கிணைத்தல் மற்றும் அகவிலைப்படி 50 சதவீதத்தை கடந்ததால் அதை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்த ஆலோசனைகள் ஆகியவையே அந்த காரணங்களாகும்.
இருப்பினும், ஏப்ரல் மாதத்திற்குள் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என்பதால் ஊழியர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாது.