உருக்கு தொழில் பாதிப்பில்லை-பாஸ்வான்

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:21 IST)
புது டெல்லி: உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியாவைச் சேர்ந்த உருக்கு தொழில் துறை அதிக அளவு பாதிக்கப்படவில்லை என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், நிதி நெருக்கடியின் பாதிப்பு உருக்கு துறையில் அதிக அளவு இல்லை. இது வரையிலும் ஊழியர்கள் பணயில் இருந்து நீக்கப்படவில்லை. உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் கோரியவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதன் பயன்பாடு 13 விழுக்காட்டில் இருந்து 1.75 விழுக்காடாக குறைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் நிதி நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது.

உள்நாட்டு உருக்கு, இரும்பு உற்பத்தி நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, உயர்ரக இரும்பு தாது ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்கும் எண்ணம் இல்லை.

சுரங்கங்களில் உற்பத்தி நிறுத்த முடியாது. சுரங்கங்களில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். எனவே இதில் உற்பத்தியை நிறுத்துவது சாத்தியமில்லை. இதனால் தான் அரசு உயர்ரக இரும்பு தாது ஏற்றுமதியை நிறுத்த விரும்பவில்லை. இதன் ஏற்றுமதி அளவை குறைக்க ஒரே வழி, ஏற்றுமதி வரியை அதிகரிப்பதுதான் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்