மின்சார காரை பயன்படுத்த தொலைபேசி துறை முடிவு

வியாழன், 4 டிசம்பர் 2008 (16:43 IST)
புது டெல்லி: சுற்றுப் புறச் சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் காரை பயன்படுத்த தொலைபேசி துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் [Mahanagar Telephone Nigam Ltd (MTNL)] டெல்லியில் தொலைபேசி சேவை வழங்கி வருகிறது.

இதன் தொழில்நுட்ப பிரிவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் போக்குவரத்துக்காக மின்சாரத்தில் இயங்கும் ரிவா (Reva) காரை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து இந்நிறுனத்தின் இயங்குநர் (மனிதவளம்) எஸ்.பி.பச்சோரி விடுத்துள்ள அறிக்கையில், தற்போது பயன் படுத்தும் டீசலில் இயங்கும் காருக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2.50 செலவாகிறது. மின்சாரத்தில் இயங்கும் ரிவா காரை பயன்படுத்தினால் கிலோ மீட்டருக்கு 40 பைசா மட்டுமே செலவாகும். அத்துடன் ஒட்டுவதற்கும் எளிது. போக்குவரத்து நெரிசலில் கார் இன்ஜினை நிறுத்தி, எளிதாக மீண்டும் இயக்க செய்ய முடியும். இதை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலிலும் எங்கள் தொழில்நுட்ப பராமரிப்பு ஊழியர்கள், குறிப்பிட்ட இடங்களுக்கு தாமதம் இல்லாமல் செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த மின்சாரத்தில் இயங்கும் காரை பயன்படுத்துவதன் வாயிலாக, பொதுத்துறை நிறுவனங்களிலேயே சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியில் முதன் நிறுவனமாக மகாநகர் நிகாம் லிமிடெட் இருப்பதாக, இந்நிறுவனம் கூறியுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் ரிவா கார்கள் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பெங்களூருவில் உள்ள ரிவா எலக்ட்ரிக் கார் கம்பெனி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஏ.இ.வி எல்எல்சி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்