பெட்ரோல் விலை குறையாது- தியோரா!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:58 IST)
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலைகள் குறையாது என்று முரளி தியோரா தெரிவித்தார்.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் விலை ஜூலை மாதத்தில் 1 பீப்பாய் 147 டாலராக இருந்தது.

நேற்று கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 98 டாலராக குறைந்தது. பிறகு 100 டாலராக அதிகரித்தது. இதன் விலை மேலும் குறையவாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

(நியூயார்க் முன்பேர சந்தையில் அக்டோபர் மாதத்திற்கான விலை 1 பீப்பாய் 101 டாலர் என்ற அளவு இருந்தது)

கச்சா எண்ணெய் விலை குறைவதால், பெட்ரோல், டீசல் விலையும் அரசு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புது டெல்லியில் இன்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆறு மாதங்களாக இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கும் திட்டமில்லை என்று தெளிவுபடுத்தினார்.

பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பாண்டே கூறும் போது, மேலும் கச்சா எண்ணெய் விலை குறையும். கடந்த ஒன்றரை மாதமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்தியா வாங்கும் விலை 1 பீப்பாய் 95.47 டாலராக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்