புதிய சிமென்ட் தொழிற்சாலை - டால்மியா!

செவ்வாய், 22 ஜூலை 2008 (18:51 IST)
டால்மியா சிமென்ட் நிறுவனம் வருடத்திற்கு 100 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் புதிய சிமென்ட் ஆலைகளை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரியலூர் அருகே டால்மியா சிமென்ட் பாரத் நிறுவனத்தின் சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. இது டால்மியா என்ற பெயரில் சிமென்ட் விற்பனை செய்து வருகிறது. இங்கு வருடத்திற்கு 35 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் துணை நிறுவனமான டால்மியா சிமென்ட் வெஞ்சர் சார்பில் இரண்டு புதிய சிமென்ட் ஆலைகளை அமைக்க உள்ளது. இதில் ஒன்று ஆந்திர மாநிலத்தில் கடப்பாவிலும், மற்றொன்று அரியலூரிலும் அமைக்கப்படும். இது வருடத்திற்கு 100 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கும் திறனில் அமைக்கப்படும்.

இந்த நிறுவனத்திற்கு ஓ.சி.எல் இந்தியா லிமிடெட் என்ற சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தில் 21.7 விழுக்காடு பங்கு உள்ளது. ஓ.சி.எல் இந்தியா வருடத்திற்கு இருபது லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்து வருகிறது. இதை நாற்பது லட்சம் டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்று டால்மியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்