தொழில் போட்டியில் இந்தியா 41 வது இடத்தில்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (18:25 IST)
ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் மேம்பாட்டு அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் இந்தியா தொழில் துறை போட்டியில் தாய்லாந்து, மலேஷியா, மால்டா ஆகிய நாடுகளை விட பின்தங்கி உள்ளது.

இந்த அமைப்பு 100 நாடுகளின் தொழில் போட்டி குறித்து ஆய்வு நடத்தியது. இதில் இரண்டு வகையில் மதிப்பெண்கள் தரப்பட்டன. அவை தொழில் மேம்பாட்டு அளவு, தாராளமயமாக்கல் சூழ்நிலையில் தொழில் உற்பத்தி அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இத்துடன் மற்ற நாடுகளின் போட்டியை சந்திக்கும் விதமாக பொருட்களை உற்பத்தி செய்யும் திறன், மாறிவரும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல், உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தொழில்மயமாக்கல் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் தரம். ஏற்றுமதிக்கு தகுந்தாற் போல் நவீன வகை பொருட்கள் உற்பத்தி, புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவுகளில் வளர்ச்சியுள்ள நாடுகள் முன்னணி இடத்தில் உள்ளன. இதில் சிங்கப்பூர் முதலிடத்திலும், அதை தொடர்ந்து அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பெல்ஜியம், சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, கொரியா, தைவான், பிரான்ஸ், அமெரிக்கா, ஹாங்காங், ஆஸ்திரியா, சுலோவேனியா ஆகியவை முதல் 15 இடத்தில் உள்ளன.

பிரிட்டன் 16, நெதர்லாந்து 17, மலேசியா 18, கனடா 22, மால்டா 23, சீனா 26, மெக்ஸிகோ 30, பிரேசில் 39 இடத்தில் உள்ளன.

இந்தியா 41 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவிற்கும் பின்தங்கி ரஷியா 66 வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 55, வங்காளதேசம் 67, இலங்கை 75 வது இடத்தில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்