மத்திய அரசு ரூ. 21 ஆயிரம் கோடி கடன்!

சனி, 5 ஜூலை 2008 (18:55 IST)
மத்திய அரசு இந்த நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களான ஏப்ரல் முதல் மே வரை ரூ.21 ஆயிரத்து 320 கோடி கடன் வாங்கியுள்ளது.

மத்திய அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள பற்றாக்குறையை ஈடுசெய்யவே கடன் வாங்கியுள்ளது.

இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.1,13,000 கோடி கடன் வாங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு மாதங்களிலேயே 19 விழுக்காடு கடன் வாங்கிவிட்டது.

சென்ற நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் மே மாதம் வரை கடன் வாங்குவதாக திட்டமிட்டிருந்ததில் மூன்று விழுக்காடு மட்டுமே வாங்கியது.

ஆனால் இந்த நிதி ஆண்டில் ஆறு மடங்கு அதிகமாக (19%) வாங்கியுள்ளது.

இந்த இரண்டு மாதங்களில் மத்திய அரசின் வருவாய் ரூ. 25,899 கோடியாகவும், செலவு ரூ.90,750 கோடியாக இருந்தது.

அதே நேரத்தில் இரு மாதங்களில் வரி வருவாய் பற்றாக்குறை ரூ.67,731 கோடியாக உள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டை விட 122% அதிகம்.

இதே மாதிரி நிதிப் பற்றாக்குறை ரூ.73,201 கோடியாக உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் போது இந்த நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 1,33,287 கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. முதல் இரண்டு மாதங்களிலேயே நிதி பற்றாக்குறை 55% உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு மதிப்பில் 1 விழுக்காடு அளவும், நிதி பற்றாக்குறை 2.5 விழுக்காடு அளவும் குறைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

மத்திய அரசு ஏப்ரல், மே இரண்டு மாதங்களில் செலவினங்களுக்காக தேசிய சிறு சேமிப்பு நிதி, பி.எஃப், சிறு சேமிப்பில் இருந்து ரூ.7,500 கோடி கடன் வாங்கியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த நிதி ஆண்டில் வாங்கிய கடனுக்காக ரூ.7 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தியுள்ளது.

இந்த இரண்டு மாதங்களில் கடனுக்கான வட்டியாக ரூ.27,229 கோடி செலுத்தியுள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் கடனுக்கான வட்டியாக ரூ.26,221 கோடி செலுத்தி இருந்தது.

இந்த தகவல்களை தலைமை கணக்கு அதிகாரி வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்