பணவீக்கம் 7.61 விழுக்காடாக உயர்வு

வெள்ளி, 9 மே 2008 (14:46 IST)
பணவீக்க விகிதம் கடந்த 42 வாரங்களாக ( மூன்றரை வருடம் ) இல்லாத அளவு 7.61 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முதல் எல்லா மத்திய அமைச்சர்களும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்த வருடத்தில் சில மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முன்பேர வர்த்தகத்தில் சோயா, உருளைக் கிழங்கு,ரப்பர், கொண்டை கடலை, உட்பட பல உணவுப் பொருட்களின் வர்த்தகத்திற்கு தடை, சமையல் எண்ணெய், உணவு தானியம், பருப்பு வகைகளின் ஏற்றுமதிக்கு தடை, சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்நிலையிலும் ஏப்ரல் 26 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.61 விழுக்காடாக அதிகரித்துள்ளது. (அதற்கு முந்தைய வாரம் 7.57). பணவீக்க உயர்வுக்கு காரணம் உணவுப் பொருட்களின் விலையும், உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களின் விலை அதிகரித்தே.

2007 ம் ஆண்டில் ஏப்ரல் 26 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 6.01% ஆக இருந்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் 29 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலைப்பட்டியலில் தேயிலை விலை 11%, காய்கறி விலை 1%, மீன் போன்ற கடல் சார்ந்த உணவுகள் 2%, மிளகு, போன்ற நறுமன (மசாலா) பொருட்கள், ஏலக்காய் 3% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் நவதானியங்களின் விலை 1% விழுக்காடு குறைந்துள்ளது.

இதில் உளுத்தம் பருப்பு 3%, துவரம் பருப்பு 2%, முட்டை 1% விலை குறைந்துள்ளது.

ஆனால் கடுகு எண்ணெய் விலை 1%, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே போல் எண்ணெய் வித்துக்களான சூரிய காந்தி விதை விலை 2%, கடலை பயறு விலை 1%, ஆழி விதை விலை 1%, நாட்டு சர்க்கரை விலை 1% அதிகரித்துள்ளது.

சிமெண்ட், அலுமினிய தாது, அலுமினிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

உருக்கு, இரும்பு பொருட்களின் விலை குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்